Tuesday 15 June 2010

ஆசியக் கோப்பை: தோல்வியுற்ற பாகிஸ்தானின் முன்னுள்ள சவால்கள்



இந்த ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானுக்கு ஜுரத்துக்கு பின்னர் வியர்ப்பதை விட முக்கியமானது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு கௌரவத்தை காப்பாற்றுவது நோக்கமாக இருக்கும் என்றால் பாகிஸ்தானுக்கு சர்வதேச அரங்கில் தன்னை நிலைநாட்ட இந்த தொடரின் ஆட்டங்கள் பயன்பட வேண்டும். மேலும் குறிப்பாக ஷோயப் அக்தர், ஷோயப் மாலிக், கம்ரான் அக்மல் ஆகிய மூத்த வீரர்கள் பழைய ஆட்டத்திறனுக்கு திரும்ப வேண்டும் என்றும் பாக் மேலாண்மை எதிர்பார்க்கும். அடுத்து மூத்த மற்றும் இளைய வீரர்கள் அப்ரிதியின் கீழ் ஒன்றுபட்டு கொண்டை ஊசியால் பின்புறம் குத்தாமல் செயலூக்கத்துடன் செயல்பட வேண்டும் என்பதும் பாக் ரசிகர்களின் மற்றொரு பிரார்த்தனையாக இருக்கும். ஆசியக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் பாக் அணி சன்னமான வித்தியாசத்தில் தோற்றுள்ளது. இந்த தோல்வியை விட முக்கியமாக, மேற்ச்சொன்ன எதிர்பார்ப்புகள் எந்த அளவுக்கு கனிந்துள்ளன என்பதே சுவாரஸ்யமான பார்வை.



கடைசி சில ஓவர்கள் தவிர்த்து பாக் அணியின் களத்தடுப்பு அவர்களின் தரத்தை பொறுத்த அளவில் சிறப்பாகவே இருந்தது. பந்து வீச்சு புத்திசாலித்தனமாக ஒழுக்கத்துடன் இருந்தது. ஷோயப் அக்தரின் பிம்பம் ஏற்படுத்தும் அச்சுறுத்தல் இலங்கை மட்டையாட்டத்தை நிச்சயம் பாதித்தது. ஷோயப்பின் உடற்தகுதி சில ஐயங்களை ஏற்படுத்தினாலும் அவர் கூர்மையாக சராசரி 140 கி.மீ வேகத்தில் வீசினார். காயம் உறாத பட்சத்தில் அக்தரின் உளவியல் பாதிப்பு இந்த தொடரில் கணிசமாக இருக்கும். பாக் அணிக்கு இது ஒரு முக்கிய பலமாக இருக்கும். அடுத்து பாக் அணியினர் உற்சாகம் மற்றும் மனக்குவிப்புடன் மூன்றரை மணிநேரமும் இயங்கியது ஒரு நல்ல அறிகுறி என கூற வேண்டும். சாதகமான நிலைமையில் ஈடுபாட்டுடன் இயங்குவதும் பின்னர் சோர்ந்து விடுவதும் பாக் அணியின் மரபாக இருந்து வந்துள்ளது. இன்று மாறுபட்ட முறையில் அவர்கள் சிரமமான கட்டத்திலும் போராடினர். இதன் தொடர்ச்சியாக மட்டையாட்டத்திலும் அப்ரிடி சரிவில் இருந்து தன் அணியை சதம் மூலம் கிட்டத்தட்ட மீட்டுக் கொண்டு வந்தார். இந்த போராட்ட குணத்தை வரும் ஆட்டங்களிலும் பாகிஸ்தானியர் தக்க வைத்தால் வரும் உலகக் கோப்பையில் அவர்களால் அரை இறுதி வரை நிச்சயம் செல்ல முடியும்.

இந்த ஆட்டத்தின் முடிவில் பாக் அணி நேரிடும் பிரச்சனைகள் என்ன?
ஷோயப் மாலிக் மற்றும் கம்ரானின் ஆட்டத்திறன். மட்டையாட்டம் பாக் அணியின் ஒரு பலவீனமாகவே கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இருந்து வருகிறது. இந்த ஆசியக் கோப்பையில் மேற்சொன்ன மூத்த மட்டையாளர்களுடன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமின் மற்றும் ஹசன் சோபிக்காவிட்டால் பாக் அணியின் மட்டையாட்டத்துக்கு ஒரு பெரும் முடக்கமாக அது இருக்கும். யூனிஸ்கான் மற்றும் யூசுப்பை மீண்டும் வரவேற்று சமரசம் செய்யும் சூழலை உருவாக்கும். இந்த ஆதிக்க வீரர்கள் மீண்டும் நுழைவது அப்ரிடியின் தலைமைக்கு மேலும் சவாலாக இருக்கும். அப்ரிடி ஒரு இளைய அணியை மேய்க்கவே விரும்புவார்.
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates