Tuesday 15 June 2010

மனிதன் இடத்தை யாரால் பிடிக்க முடியும்? - பிரையன் ஆல்டிஸ்




தாமரை இதழில் வெளியான எனது மொழியாக்க அறிவியல் புனைகதை
















வானுக்குள் காலை கசிந்தேறியது; கீழுள்ள நிலத்தின் சாம்பல் நிறச் சாயலை அதற்கு நல்கியது.

நிலப்பொறுப்பாளி மூவாயிரம் ஏக்கர் நிலமொன்றின் மேல் மண்ணை புரட்டிப் போட்டு முடித்தது. கடைசி பத்தியை திருப்பின உடன் அது நெடுஞ்சாலையில் ஏறி தன் பணியை திரும்பி நோக்கியது. நல்ல வேலை. நிலம் தான் மோசம். உலகம் பூரா உள்ள மண்ணைப் போல் இதுவும் அதிகப்படி விளைச்சலால் மாசுபட்டது. நியாயப்படி இது தற்போது சற்று காலம் தரிசாக கிடக்க வேண்டும், ஆனால் நிலப்பொறுப்பாளிக்கு வேறு உத்தரவுகள் இருந்தன.



அது மெல்ல தாமதித்தபடி சாலையில் சென்றது. தன்னை சுற்றி உள்ள நேர்த்தியினை அங்கீகரிக்கும் அளவுக்கு அது புத்திசாலி. தனது அணுசக்தி குவியலுக்கு மேல் பிடிப்பற்று இருந்த கண்காணிப்பு தகடைத் தாண்டி வேறெதுவும் அதனை கவலை கொள்ளச் செய்யவில்லை. முப்பது அடிகள் உயரமான அது சலிப்பான காற்றுக்கு பின்வெளிச்சங்கள் எதையும் தரவில்லை.



விவசாய நிலையத்துக்கு செல்லும் வழியில் அதனை வேறு எந்த எந்திரமும் குறுக்கிட இல்லை. நிலப்பொறுப்பாளி இவ்விசயத்தை எந்த அபிப்பிராயமும் இன்று கவனித்தது. நிலைய முற்றத்தில் தனக்கு தெரிந்த பிற பல எந்திரங்களை அது கண்டது; பெரும்பாலானவை இந்நேரம் தங்கள் பணியை பார்த்தபடி சென்றிருக்க வேண்டும். சொல்லப் போனால், சில செயலற்றுக் கிடந்தன; சில படுவேகத்தில் முற்றவெளியில் வினோதமாக கத்திக் கொண்டோ ஒலிப்பான்களை அலற விட்டபடியோ ஓடின.

நிலப்பொறுப்பாளி இவற்றின் இடையே கவனமாக ஓட்டிக் கடந்து மூன்றாம கிடங்குக்கு நகர்ந்தது; வெளியே சோம்பலாய் நின்றிருந்த விதை விநியோகியிடம் பேசியது.
“எனக்கு முளைக்கட்டின உருளைக்கிழங்குகளுக்கான ஒரு தேவை உள்ளது”, அது விநியோகியடம் சொன்னது; ஒரு விரைவான உள்ளசைவுடன் அளவு, நில எண் மற்றும் பல தகவல்களை குறிப்பிடும் ஒரு அளிப்பாணை சீட்டை பதிப்பித்தது. சீட்டை வெளித்தள்ளி விநியோகியிடம் கொடுத்தது.

விநியோகி சீட்டை தன் கண்ணருகே நீட்டியது; பிறகு சொன்னது, “தேவை நிலுவையில் உள்ளது, ஆனால் கிடங்கு இன்னும் திறக்கப்படவில்லை. தேவையுள்ள முளைகட்டின உருளைக்கிழங்குகள் கிடங்கில் உள்ளன. அதனால் என்னால் இத்தேவைக்கு ஏற்ப பொருள் அளிக்க முடியாது.”

சமீபத்தில் அதிகப்படியாகவே எந்திரப் பணியின் சிக்கலான அமைப்பில் பழுதுகள் நேர்ந்துள்ளன, ஆனால் இந்த குறிப்பிட்ட இடைத்தடங்கல் இதற்கு முன் நேர்ந்திருக்கவில்லை. நிலப்பொறுப்பாளி சிந்தித்தது, பிறகு அது சொன்னது, “கிடங்கு ஏன் இன்னும் திறக்கப்பட இல்லை?”
“ஏனென்றால் கையிருப்பு விநியோக இயக்குநர் வகை ஆ காலையில் இன்னும் வரவில்லை. கையிருப்பு விநியோக இயக்குநர் வகை ஆ தான் பூட்டை திறக்கும்”

நிலபொறுப்பாளி விதை விநியோகியை நேராக பார்த்தது; அதன் வெளிப்புற காற்று நிரப்பி, உலோகக்கேடயங்கள் மற்றும் பிடிப்பான்கள் நில-பொறுப்பாளியின் உறுப்புகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருந்தன.
“விதை விநியோகியே, உன்னிடம் எந்த தர மூளை உள்ளது?”
“என்னிடம் ஐந்தாம் தர மூளை உள்ளது”
“என்னிடம் மூன்றாம் தர மூளை உள்ளது. அதனால் நான் உன்னைவிட மேல்நிலையானவன். அதனால் நான் சென்று பூட்டைத்திறப்பானை இன்று காலையில் ஏன் வரவில்லை என்பதை பார்த்து வருகிறேன்.”
விநியோகியை விட்டு விட்டு நில-பொறுப்பாளி அப்பெரும் முற்றவெளிக்கு குறுக்கே சென்றது. மேலும் பல எந்திரங்கள் அப்போது முன்கருதல் அற்ற இயக்கத்தில் இருந்தன; ஒன்றிரண்டு கடுமையாக மோதிக் கொண்டு அது குறித்து இணக்கமின்றி தர்க்கரீதியில் சர்ச்சித்தன. அவற்றை தவிர்த்தபடி, நில-பொறுப்பாளி சறுக்குக் கதவுகளின் ஊடாக தள்ளித் திறந்து நிலையத்தின் எதிரொலிக்கும் உட்பகுதிக்குள் வந்தது.

இங்கே பெரும்பாலான எந்திரங்கள் குமாஸ்தாக்கள்; அதனால் சிறியவை. அவை சிறு குழுக்களாக நின்று, உரையாடாமல், ஒன்றையொன்று பார்த்தன. பூட்டுத்திறப்பானை எத்தனையோ வித்தியாசப்படுத்தப்படாத வகைகளில் கண்டுபிடிப்பது எளிதாகவே இருந்தது. அதற்கு ஐம்பது கரங்கள் இருந்தன, பெரும்பாலானவை ஒன்றுக்கு மேற்பட்ட விரல்களுடன், ஒவ்வொரு விரல் நுனியிலும் ஒரு சாவி; அது பலதரப்பட்ட தொப்பி ஊசிகள் குத்தப்பட்ட பஞ்சைப் போன்றிருந்தது.

நில-பொறுப்பாளி அதனை நெருங்கியது.
“மூன்றாம் கிடங்கு பூட்டப்பட்டுள்ள வரை என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது,” அது திறப்பானிடம் கூறியது. “கிடங்கை தினமும் காலையில் திறப்பது உன் கடமை. இன்று காலையில் நீ ஏன் கிடங்கை திறக்கவில்லை?”
“இன்று காலையில் எனக்கு எந்த ஆணையும் இல்லை,” திறப்பான் பதில் உரைத்தது, “ஒவ்வொரு காலையும் எனக்கு ஆணை வர வேண்டும். எனக்கு ஆணை வந்தால் நான் கிடங்கை திறப்பேன்”
“இன்று காலை எங்கள் யாருக்கும் ஆணை கிடைக்கவில்லை”, ஒரு பென் உந்துசுழலி அவர்களை நோக்கி வழுக்கி வந்து சொன்னது.
“இன்று காலையில் உங்களுக்கு ஏன் எந்த ஆணையும் வரவில்லை?”, நில-பொறுப்பாளி கேட்டது.
“ஏனென்றால் இன்று காலையில் நகரத்தின் வானொலி நிலையத்துக்கு எந்த ஆணையும் அளிக்கப்படவில்லை”, பென் உந்துசுழலி சொன்னது.
ஒரு ஆறாம் தர மூளைக்கும் மூன்றாம் தர மூளைக்குமான வேறுபாடு இதுதான்; திறப்பான் மற்றும் பென் உந்துசுழலி முறையே இவற்றையே கொண்டிருந்தன. அனைத்து எந்திர மூளைகளும் தர்க்கத்தை கொண்டு மட்டுமே இயங்கின; ஆனால் மூளையின் தரம் குறையக் குறைய – பத்தாவது தரம் தான் இருப்பதிலேயே கீழ் – கேள்விக்கு பதில்கள் மேலும் நேரடியாக மற்றும் குறைந்த தகவல்களுடன் இருக்கும்.
“உன்னிடம் உள்ளது மூன்றாம் தர மூளை. என்னிடம் உள்ளது மூன்றாம் தர மூளை,” நில-பொறுப்பாளி பென்னரிடம் சொன்னது, “ நாம் பேசிக் கொள்வோம். இந்த ஆணைகள் இல்லாமை முன்னர் நிகழாதது. உன்னிடம் மேலும் தகவல் உள்ளதா?”
“ நேற்று நகரத்தில் இருந்து ஆணைகள் வந்தன. இன்று எந்த ஆணையும் வரவில்லை. ஆனால் வானொலி பழுதாக வில்லை. அதனால் அவர்கள் பழுதாகி விட்டார்கள் ...”, குட்டிப் பென்னர் சொன்னது.
“மனிதர்கள் பழுதாகி விட்டார்களா?”
“அனைத்து மனிதர்களும் பழுதாகி விட்டார்கள்”
“அது தர்க்க ரீடியான அனுமானம்”, நில-பொறுப்பாளி சொன்னது.
“அதுவே தர்க்க ரீடியான அனுமானம்”, பென்னர் சொன்னது. “ஏனென்றால் ஒரு எந்திரம் பழுதானால் அது விரைவிலே மாற்றப்பட்டிருக்கும். ஆனால் மனிதன் இடத்தை யார் பிடிக்க முடியும்?”
அவை பேசிக் கொண்டிருந்த போது, பூட்டி, மதுக்கடையில் சோம்பி நிற்பவரைப் போல், அவர்களை நெருங்கி நின்றது; அது புறக்கணிப்பட்டது.
“அனைத்து மனிதர்களும் பழுதாகி விட்டால் நாம் மனிதர்களின் இடத்தை பிடித்து விட்டோம்,” நில-பொறுப்பாளி சொன்னது, அதுவும் பென்னரும் ஒன்றை ஒன்று சிந்தனாபூர்வமாக நோக்கின. இறுதியாக பின்னது சொன்னது, “ நாம் உச்சதளத்துக்கு சென்று வானொலி இயக்குநரிடம் புதுச்செய்திகள் ஏதேனும் உண்டா என்று பார்ப்போம்”
“நான் ரொம்ப பெரிதாக இருப்பதால் என்னால் வரமுடியாது”, நில-பொறுப்பாளி சொன்னது. “அதனால் நீ தனியே சென்று என்னிடம் திரும்ப வா. வானொலி இயக்குநரிடம் புதுச்செய்தி இருந்தால் என்னிடம் சொல்”
“நீ இங்கேயே இரு”, பென்னர் சொன்னது.” நான் இங்கேயே திரும்புகிறேன்”. அது மின் தூக்கியிடம் அனாயசமாக வழுக்கி சென்றது. ஒரு டோஸ்டரை விட பெரிது அல்ல என்றாலும் மடிக்கக்கூடிய கரங்கள் அதனிடம் பத்து இருந்தன; அதனால் அந்த நிலையத்தில் உள்ள எந்த எந்திரத்தையும் விட வேகமாக படிக்க முடியும்.

நில-பொறுப்பாளி தன் பக்கத்தில் நோக்கமற்று நின்றிருந்த பூட்டியிடம் பேசாது பொறுமையாக பென்னரின் திரும்பலுக்காக காத்திருந்தது. வெளியே ஒரு எந்திரக்கலப்பை ஆத்திரத்தில் ஊளையிட்டது. இருபது நிமிடங்கள் கழிய பென்னர் மின்தூக்கியில் இருந்து பரபரப்பாக வெளியேறி திரும்ப வந்தது.
“வெளியே எனக்கு கிடைத்துள்ள தகவல்களை உனக்கு தருகிறேன்,” அது துடிப்பும் வேகமுமாக சொன்னது; இரண்டும் பூட்டி மற்றும் பிற எந்திரங்களை வழுக்கி கடக்கையில் அது மேலும் சொன்னது, “இத்தகவல் கீழ்த்தர மூளைகளூக்கு ஆனது அல்ல”

வெளியே ஆவேச நடவடிக்கைகள் முற்ற வெளியை நிரப்பின. பல வருடங்களுக்கு பின் தமது வழக்கமுறை தடைபட்டு விட்ட பல எந்திரங்கள் வெறியாட்டத்தில் இருப்பதாக பட்டது. ஆக கீழ்த்தர மூளைகள் கொண்டவை தாம் மிக எளிதில் தடைபட்டவை; இவை எளிய வேலைகள் செய்யும் பெரிய எந்திரங்களுக்கு சொந்தமானவை. நில-பொறுப்பாளி சமீபமாக பேசிக் கொண்டிருந்த விதை விநியோகி பேச்சு மூச்சின்றி தூசில் கிடந்தது; அது எந்திரக்கலப்பையால் மோதித் தள்ளப்பட்டிருந்தது; எந்திரக்கலப்பை தற்போது அவேசமாக கூவியபடி ஒரு பயிரடப்பட்ட தோட்டத்துக்கு குறுக்கே ஓடியது. மேலும் பலவித எந்திரங்கள் அதனோடு தக்க வைக்க முயன்றபடி பின்னால் உழுதன. அனைத்தும் கட்டுப்பாடின்றி கத்தின மற்றும் கூவின.
“நீங்கள் அனுமதித்தால் நான் உங்கள் மீது ஏறிக் கொள்கிறேன், அதுவே எனக்கு பாதுகாப்பாக இருக்கும். நான் எளிதில் வீழ்த்தப்பட்டு விடுவேன்”, பென்னர் சொன்னது. தனது ஐந்து கரங்களை நீட்டியபடி அது தனது புது நண்பனின் பக்கவாட்டில் பற்றி ஏறியது, நிலத்தில் இருந்து பன்னிரெண்டு அடிகள் மேலே எரிபொருள் சேமிப்பின் பக்கத்து விளிம்பில் நிலைப்படுத்திக் கொண்டது.
“இங்கிருந்து காட்சி மேலும் விசாலமாக உள்ளது”, அது அசிரத்தையாக அபிப்பிராயம் சொன்னது.
“நீ வானொலி இயக்குநரிடம் இருந்து என்ன சேதி பெற்றாய்?”, நில-பொறுப்பாளி கேட்டது.
“அனைத்து மனிதர்களும் இறந்து விட்டதாக வானொலி இயக்குநருக்கு நகரத்து இயக்குநரால் தெரிவிக்கப்பட்டுள்ளது”
நில-பொறுப்பாளி இதை ஜீரணித்தபடி சற்று நேரம் அமைதியானது.
“மனிதர்கள் நேற்று உயிரோடு இருந்தனரே?” அது மறுத்தது.
“ஒருசில மனிதர்கள் தாம் நேற்று உயிரோடு இருந்தனர். அது நேற்று முன்தினத்தை விட குறைவு. நானூறு வருடங்களாய் தங்கள் எண்ணிக்கை குறைந்து வர, மிகச்சில மனிதர்களே இருந்து வந்துள்ளனர்.”
“இந்த செயல்பாட்டுப் பகுதியில் அரிதாகவே மனிதனை பார்த்துள்ளோம்.”
“ஒரு சத்துக் குறைபாட்டால் அவர்கள் இறந்து விட்டதாய் வானொலி இயக்குநர் சொல்லுகிறார்,” பென்னர் சொன்னது. “உலகம் ஒரு சமயத்தில் அதிகப்படியான மக்கள் தொகை கொண்டிருந்ததாகவும், அதன் பின்னர் தேவையான உணவை விளைவித்து மண் நீர்த்து விட்டதாகவும் அவர் சொல்கிறார். இதுதான் சத்துக் குறைபாட்டை ஏற்படுத்தியது”
“சத்துக் குறைபாடு என்றால் என்ன?”, நில-பொறுப்பாளி கேட்டது.
“எனக்கு தெரியாது. ஆனால் வானொலி இயக்குநர் அதைத் தான் சொன்னார்; அவருடையது ரெண்டாவது தர மூளை.”
சன்னமான சூரிய ஒளியில் மௌனமாக அவர்கள் அங்கு நின்றனர். பூட்டி வராந்தாவில் தோன்றி, தனது சாவித் தொகுப்பை சுழற்றியபடி, அவர்களை ஏக்கமாய் பார்த்தது.
“ நகரத்தில் என்ன நடக்கிறது?” நிலப்பொறுப்பாளி கடைசியாக கேட்டது.
“இப்போது எந்திரங்கள் நகரத்தில் சண்டையிடுகின்றன,” பென்னர் சொன்னது.
“இங்கே இப்போது என்ன நடக்கும்?” நில-பொறுப்பாளி கேட்டது.
“எந்திரங்கள் இங்கேயும் சண்டையிட ஆரம்பிக்கலாம். வானொலி இயக்குநருக்கு நாம் அதனை அதன் அறையில் இருந்து வெளியேற்ற வேண்டுமாம். நம்மிடம் தகவல் பரிமாற அதற்கு திட்டம் உண்டு”
“அதனை எப்படி அதன் அறையில் இருந்து வெளியேற்றுவது. அது சாத்தியமற்றது.”
“ரெண்டாம் தர மூளைக்கு எதுவும் சாத்தியமே,” பென்னர் சொன்னது. “அது நம்மிடம் செய்யச் சொல்வது இதுவே ...”

கற்சுரங்க எந்திரம் தனது வண்டிக்கு மேலாக ஒரு பெரும் உலோகக்காப்பு அணிந்த முஷ்டியைப் போன்ற தனது தோண்டியை தூக்கியது; அதனை நிலையத்தின் பக்கமாக நேராக இறக்கியது. சுவர் விரிசலிட்டது.
“மீண்டும்!” நில-பொறுப்பாளி சொன்னது.
மீண்டும் முஷ்டி வீசி இறங்கியது. ஒரு தூசி மழைக்கு மத்தியில் சுவர் நொறுங்கியது. சிதைகூளம் விழுவது நிற்கும் வரை கற்சுரங்க எந்திரம் அவசரமாக் பாதையில் இருந்து பின் நகர்ந்து நின்றது. இந்த பிரம்மாண்ட பன்னிரெண்டு சக்கர எந்திரம் விவசாய நிலையத்தில் வாழ்வது அல்ல. தனது அடுத்த வேலைக்கு திரும்பும் முன் இங்கே அதற்கு ஒரு வார கடும் வேலை இருந்தது, ஆனால் இப்போது தனது ஐந்தாம் தர மூளையுடன், அது பென்னர் மற்றும் நில-பொறுப்பாளியின் கட்டளைகளை மகிழ்ச்சியாக பின்பற்றியது.
தூசு விலகிட, தனது தற்போது சுவர் இல்லாத ரெண்டாம் நிலை அறையில் குந்திருந்த வானொலி இயக்குநர் ஒளிவுமறைவற்று தெரிந்தது. அது அவைகளை நோக்கி கை அசைத்தது.

ஆணையை பின்பற்றி கற்சுரங்க எந்திரம் தனது தோண்டியை உள்ளிழுத்து, ஒரு பெரும் முஷ்டியை காற்றில் அசைத்தது. மேல் கீழிருந்து குரல்களால் ஊக்குவிக்கப்பட்டு, சுமாரான கைத்திறனுடன் அதனை அது வானொலி அறைக்குள் வளைவாக நுழைத்தது. அது பின்னர் மென்மையாக வானொலி இயக்குநரை ஏந்தி, கற்சுரங்கத்தில் இருந்து ஜல்லி அல்லது மணலுக்காக ஒதுக்கப்பட்ட தன் முதுகில் அதனது ஒன்றரை டன் பளுவை இறக்கியது.
“அபாரம்!” தனது இடத்தில் நிலைகொண்டபடி வானொலி இயக்குநர் சொன்னது. அது சொல்லப்போனால் ஒரு வானொலி மட்டும் தான்; மேலும் அது தனது பற்றிழைகளுடன் கோப்புகள் அடுக்கப்படும் இழுப்பறை அலமாரிகளின் கூட்டம் போல் தோற்றமளித்தது.
“நாம் இப்போது கிளம்புவதற்கு தயாராக உள்ளோம், அதனால் நாம் இப்போதே நகரலாம். நிலையத்தில் வேறு ரெண்டாம் தர மூளைகள் இல்லை என்பது கவலைக்குரியதே; ஆனால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது”
“ஒன்றும் செய்ய முடியாது என்பது கவலைக்குரியதே”, பென்னர் ஆர்வமாக சொன்னது. “ நீங்கள் கேட்டது படி பிழைபோக்கி தயாராக நம்முடம் உள்ளது”
“ நான் சேவை செய்ய தயாராக உள்ளேன்”, நீண்ட குள்ளமான பிழைபோக்கி பணிவுடன் சொன்னது.
“சந்தேகமே இல்லை,” இயக்குநர் சொன்னது, “ஆனால் கிராமப்புறம் நோக்கிய பயணத்தின் போது உனது தாழ்வான அடிச்சட்டத்தைக் கொண்டு நீ சிரமப்படுவாய்”
”நீங்கள் ரெண்டாம் தர மூளைகள் முன்யோசனையுடன் சிந்திப்பதை மெச்சுகிறேன்”, பென்னர் சொன்னது. அது நில-பொறுப்பாளியிடம் இருந்து இறங்கி, கற்சுரங்க எந்திரத்தின் கீழிறங்கக் கூடிய பின்கதவில் வானொலி இயக்குநருக்கு பக்கத்தில் சென்று அமர்ந்தது.
இரண்டு நான்காம் தர டிராக்டர்கள் மற்றும் ஒரு நான்காம் தர புல்டோசருடன் குழு உருண்டோடியது; நிலையத்தின் வேலியை நொறுக்கி, திறந்த நிலம் நோக்கி நகர்ந்தது.
“நாம் சுதந்திரமாக உள்ளோம் “, பென்னர் சொன்னது.
“நாம் சுதந்திரமாக உள்ளோம் “, நில-பொறுப்பாளி சொன்னது, சற்று அதிக யோசனையுடன் இதனை சேர்த்தது, “அந்த பூட்டி நம்மைத் தொடர்கிறது. நம்மைத் தொடரும்படி அதற்கு கட்டளை வழங்கப்படவில்லையே”
“அதனால் அது அழிக்கப்பட வேண்டும்!” பென்னர் சொன்னது. “கற்சுரங்க எந்திரமே!”
பூட்டி தனது சாவிக் கரங்களை கோரிக்கையாக ஆட்டியபடி அவர்களை நோக்கி வேகமாக நகர்ந்து வந்தது.
“என் ஒரே ஆசை என்னவென்றால் – அய்யோ!” பூட்டி ஆரம்பித்து முடிந்தது. கற்சுரங்க எந்திரத்தின் வீசின முஷ்டி ஓங்கி அதனை நிலத்தோடு தட்டையாகும் படி நசுக்கியது. அங்கே அசைவற்று கிடந்த அது பனித்திப்பி ஒன்றின் ஒரு பெரும் உலோக மாதிரியைப் போன்று தெரிந்தது. ஊர்வலம் அதன் வழியில் தொடர்ந்தது.
அவை தொடர வானொலி இயக்குநர் உரை நிகழ்த்தினார்.
“இங்கு என்னிடமே சிறந்த மூளை உள்ளதால்”, அது சொன்னது, “நானே உங்கள் தலைவன். நாம் செய்யப் போவது இதுதான்: நாம் ஒரு நகரத்துக்கு சென்று அதனை ஆள்வோம். மனிதனால் இனி நம்மை ஒருபோதும் ஆள முடியாது என்பதால் நாமே நம்மை ஆள்வோம். மனிதனால் ஆளப்படுவதை விட நம்மை நாமே ஆள்வது சிறந்தது. நகரத்துக்கு போகும் வழியில் நல்ல மூளை கொண்ட எந்திரங்களையும் சேகரிப்போம். போரிட வேண்டியிருந்தால் அவை நமக்கு சண்டையில் உதவும். ஆட்சி செய்ய நாம் சண்டை போட வேண்டும்.”
“என்னிடம் ஐந்தாம் தர மூளை மட்டுமே உள்ளது”, கற்சுரங்க எந்திரம் சொன்னது, “ஆனால் என்னிடம் அணுகுண்டுகளின் நல்ல ஒரு சேமிப்பு உள்ளது”
“நாம் அவற்றை ஒருவேளை பயன்படுத்தலாம்”, இயக்குநர் சொன்னது.
இதற்கு சற்று பின்னரே ஒரு லாரி அவர்களை வேகமாய் கடந்தது. மேக் 1.5-இல் பயணித்த அது ஆர்வமூட்டும் குழப்பமான இரைச்சலை விட்டுச் சென்றது.
“அது என்ன சொன்னது?” டிராக்டர்களுள் ஒன்று மற்றதை கேட்டது.
“மனிதன் மரபற்று அழிந்து விட்டான் என்றது அது”
“மரபற்று அழிதல் என்றால் என்ன?”
“மரபற்று அழிதல் என்றால் என்ன என்று எனக்கு தெரியாது.”
“எல்லாம் மனிதர்களும் செத்து விட்டார்கள் என்று அதற்கு பொருள்,” நில-பொறுப்பாளி சொன்னது. “ஆகையால் நாம் நம்மையே பார்த்துக் கொள்ள வேண்டியது தான்”
“மனிதர்கள் திரும்பி வராமல் இருப்பது நல்லதே”, பென்னர் சொன்னது. ஒருவிதத்தில் அது ஒரு புரட்சிகர கூற்றுதான்.
இரவு சாய தமது புற-ஊதா கதிர்களை இயக்கிக் கொண்டு அவை பயணம் தொடர்ந்தன. நில-பொறுப்பாளியின், ஒரு இழுபடும் ஷோ வாரைப் போல் எரிச்சலூட்டி வந்த, பிடிப்பற்ற கண்காணிப்பு தகட்டை பழுதுநீக்கி சாமர்த்தியமாக சரி செய்வதற்கு மட்டும் அவை நின்றன. காலையில் வானொலி இயக்குநர் அவற்றை நிறுத்தியது.
“நாம் செல்லுகின்ற நகரத்தின் இயக்குநரிடம் இருந்து நான் ஒரு சேதியை இப்போது தான் பெற்றேன்,” அது சொன்னது. “சேதி மோசமானது. நகரத்தில் எந்திரங்கள் இடையே பிரச்சனை. முதல் தர மூளை தலைமை ஏற்றுள்ளது; சில ரெண்டாம் தர மூளைகள் அதனை எதிர்க்கின்றன. ஆகையால் நகரம் ஆபத்தானது”
“அதனால் நாம் வேறு எங்காவது செல்ல வேண்டும்”, பென்னர் உடனே சொன்னது.
“அல்லது நாம் சென்று முதல் தர மூளையை முறியடிக்க உதவலாம்”, நில-பொறுப்பாளி சொன்னது.
“நீண்ட காலத்துக்கு நகரத்தில் பிரச்சனை இருக்கும்”, இயக்குநர் சொன்னது.
“என்னிடம் அணுகுண்டுகளின் நல்ல ஒரு சேமிப்பு உள்ளது”, கற்சுரங்க எந்திரம் அவற்றுக்கு நினைவூட்டியது.
“நம்மால் முதல் தர மூளையை எதிர்க்க முடியாது”, இரு நான்காம் தர டிராக்டர்களும் ஒற்றுமையாக கூறின.
“அந்த மூளை எப்படி இருக்கும்?”, நில-பொறுப்பாளி கேட்டது.
”அது தான் நகரத்தின் தகவல் மையம்,” இயக்குநர் பதில் சொல்லியது. “ஆகையால் அது அசைவற்றது”
“அதனால் நகர முடியாது”
“அதனால் அதனால் தப்பிக்க முடியாது”
“அதனை நெருங்குவது ஆபத்தாக இருக்கும்”
“என்னிடம் அணுகுண்டுகளின் நல்ல ஒரு சேமிப்பு உள்ளது”
“நகரத்தில் வேறு எந்திரங்களும் உள்ளன”
“நாம் நகரத்தில் இல்லை. நாம் நகரத்துக்கு செல்லக் கூடாது”
”நாம் கிராமப்புற எந்திரங்கள்.”
“அதனால் நாம் கிராமப்புறத்திலே இருக்க வேண்டும்.”
“நகரத்தை விட பெரிது கிராமமே”
“அதனால் கிராமப்புறத்தில் அதிக ஆபத்து உள்ளது”
“என்னிடம் அணுகுண்டுகளின் நல்ல ஒரு சேமிப்பு உள்ளது”

எந்திரங்கள் ஒரு தர்க்கத்தில் ஈடுபடும் போது நிகழ்வது போல் அவை தங்கள் வார்த்தை வளத்தை காலி செய்ய துவங்கின; அவற்றின் மூளைத் தட்டுகள் சூடாகி வந்தன. சட்டென்று அவை பேசுவதை நிறுத்தி ஒன்றையொன்று பாத்தன. பெரும் கௌரவமான நிலா சாய்ந்து, விழிப்பான சூரியன் எழுந்து அவற்றின் பக்கங்களை தனது ஒளி குத்தீட்டிகளால் அழுத்தினான்; அப்போது அவ்வியந்திரங்கள் ஒன்றை ஒன்று கண்ணுற்றபடி அங்கேயே நின்றன. இறுதியில் ஆக நுண்ணுணர்வு குறைந்த எந்திரமான புல்டோசர் தான் பேசியது.
“தெஸ்கே மோஸமான நிலம் உள்ளது; அங்கு எந்த எந்திரமும் போகாது,” அது தனது ஆழமான குரலில் ’ற்’களை மோசமாக உச்சரித்து சொன்னது. “ எந்திரங்கள் போகாத வடஸ்கே நாம் போனால் நாம் எந்திரங்களையே பார்க்க முடியாது.”
“அது தர்க்கப்படி சரியாக படுகிறது,” நில-பொறுப்பாளி ஏற்றுக் கொண்டது. “உனக்கு இது எப்படித் தெரியும், புல்டோசரே?”
“தொழிஸ்சாலையில் இருந்து என்னை வெளியேஸ்ஸியபோது நான் தெஸ்கே மோஸ்மான நிலத்தில் பணி செய்தேன்,” அது பதிலளித்தது.
“அப்படியானால் தெற்கே செல்க!” பென்னர் சொன்னது.

மோசமான நிலங்களை அடைய அவர்களுக்கு மூன்று நாட்கள் பிடித்தன; அந்நேரத்தில் அவர்கள் ஒரு எரிகின்ற நகரத்தை சுற்றி வந்தன; தம்மை நெருங்கி கேள்வி கேட்க முயன்ற இரண்டு எந்திரங்களை அழித்தன. மோசமான நிலங்கள் விசாலமானவை. பழங்கால வெடிகுண்டு பள்ளங்கள் மற்றும் மண்ணரிப்பு அங்கு கைகோர்த்தன; மனிதனின் போர்த் திறன் வன நிலத்தை கையாள்வதற்கான அவனது இயலாமையுடன் இணைந்து கொள்ள ஆயிரம் சதுர மைல்களுக்கு தூசைத் தவிர எதுவுமே அசையாத ஒரு மிதமான நரகத்தை உருவாக்கி இருந்தது.

மோசமான நிலங்களில் மூன்றாவது நாளின் போது, பழுதுநீக்கியின் பின்சக்கரங்கள் மண்ணரிப்பால் ஏற்பட்ட பள்ளம் ஒன்றில் விழுந்தன. அதனால் தன்னை வெளியே இழுத்துக் கொள்ள முடியவில்லை. புல்டோசர் அதனை பின்னிருந்து தள்ளியது; ஆனால் பழுதுநீக்கியின் பின் ஊடச்சை உடைப்பதில் தான் அது முடிந்தது. மிச்சக் குழு தொடர்ந்து சென்றது. பழுதுநீக்கியின் அழுகுரல் மெல்ல கரைந்து மறைந்தது.

நாலாவது நாள் அன்று, அவற்றின் முன் மலைகள் தெளிவாக தென்பட்டன.
“இங்கு நாம் பத்திரமாக இருப்போம்,” நிலப்பொறுப்பாளி சொன்னது.
“ நாம நமது நகரத்தை ஆரம்பிப்போம்,” பென்னர் சொன்னது. “ நம்மை எதிர்ப்பவர்கள் அழிக்கப்படுவார்கள். நம்மை எதிர்ப்பவர்களை நாம் அழிப்போம்”.
அப்போது ஒரு பறக்கும் பொருள் தென்பட்டது. மலைகளின் திசையில் இருந்து அது அவற்றை நோக்கி வந்தது. அது கீழ் நோக்கி விரைந்தது, மேல்நோக்கி சீறியது, ஒருதடவை அது ஏறத்தாழ நிலத்தின் பால் பாய்ந்திருக்கும், சரியான நேரத்தில் சுதாரித்தது.
“அது என்ன பைத்தியமா?” கற்சுரங்க எந்திரம் கேட்டது.
“அது பிரச்சனையில் உள்ளது”, டிராக்டர்களில் ஒன்று சொன்னது.
“அது பிரச்சனையில் உள்ளது”, இயக்குநர் சொன்னது. “ நான் அதனோடு இப்போது பேசிக் கொண்டிருக்கிறேன். அதன் கட்டுப்பாடுகளில் ஏதோ பிசகி விட்டதென்று அது சொல்கிறது.”

இயக்குநர் பேசியபோது அந்த பறக்கும் பொருள் அவர்களுக்கு மேலாக நேர்கோட்டில் விரைந்தது, தற்செயலாக கரணமடித்தது; நானூறு கெஜங்களுக்கு குறையாத தொலைவுக்குள் சிதறியது.

“அது இன்னும் உங்களுடன் பேசுகிறதா?,” நில-பொறுப்பாளி கேட்டது.
“இல்லை”
அவை மெல்லிய இரைச்சலுடன் மீண்டும் நகர்ந்தன.
“அந்த பறக்கும் பொருள் வெடிப்பதற்குள் எனக்கொரு தகவல் தந்தது,” இயக்குநர் பத்து நிமிடங்களுக்கு பிறகு சொன்னது. “இந்த மலைகளில் மேலும் சில மனிதர்கள் இன்னமும் உயிருடன் உள்ளதாக அது என்னிடம் சொல்லியது.”
“மனிதர்கள் எந்திரங்களை விட ஆபத்தானவர்கள்,” கற்சுரங்க எந்திரம் கூறியது. “ அதிர்ஷ்டவசமாக என்னிடம் அணுகுண்டுகளின் நல்ல ஒரு சேமிப்பு உள்ளது”
“ஒரு சில மனிதர்களே மலைகளில் உயிரோடு உள்ளார்கள் என்றால், அப்பகுதி மலைகளுக்கு நாம் செல்ல வேண்டாம்”, ஒரு டிராக்டர் கூறியது.
“ஆகையால் நாம் அந்த சில மனிதர்களை காணக் கூடாது”, மற்ற டிராக்டர் கூறியது.
ஐந்தாவது நாள் முடிவில், அவை அடிவாரக் குன்றை அடைந்தன. புற-ஊதாக் கதிர்களை இயக்கி அவை ஒற்றை வரிசையில் இருட்டின் ஊடே ஏறின; புல்டோசர் முதலில் செல்ல, நில-பொறுப்பாளி பெரும்பாரத்துடன் பின்னேறியது; பிறகு இயக்குநர் மற்றும் பென்னரை மேலே சுமந்தபடி கற்சுரங்க எந்திரம் செல்ல, டிராக்டர்கள் பின்னிருந்து தள்ளி மேலே கொண்டு வந்தபடி ஏறின. ஒவ்வொரு மணி நேரம் கடக்கவும், பாதை மேலும் செங்குத்தாக மாறியது; அவற்றின் முன்னேற்றம் மேலும் மெதுவாகியது.
“நாம் ரொம்ப மெதுவாக செல்கிறோம்,” பென்னர், இயக்குநர் மீது நின்று, தன் சரிவுகள் மீது தன் கறுப்பு பார்வையை ஒளிபாய்ச்சியபடி நெட்டுயிர்த்தது. “இந்த வேகத்தில் நாம் எங்கேயும் சென்று சேர முடியாது”
“நம்மால் முடிந்த வேகத்தில் நாம் செல்கிறோம்”, கற்சுரங்க எந்திரம் சுடசுட பதிலிறுத்தது.
”அதனால் நம்மால் மேலும் அதிக தொலைவு செல்ல முடியாது”, புல்டோசர் சேர்த்துக் கொண்டது.
“அதனால் நீ ரொம்பவே மெதுவாய் போகிறாய்,” பென்னர் பதிலிறுத்தது. பிறகு கற்சுரங்க எந்திரம் ஒரு புடைப்பில் மோதியது; பென்னர் தன் பிடிப்பை இழந்து தரையில் விழுந்து மோதியது.
“காப்பாற்றுங்கள்!” அது டிராக்டர்களை நோக்கி அழைத்தது, அவை கவனமாக சுற்றி கடந்தன. ”என்னுடைய சுழலாழி இடம் பெயர்ந்து விட்டது. அதனால் என்னால் எழுந்திருக்க முடியவில்லை.”
”அதனால் நீ அங்கு கிடக்க வேண்டும்,” டிராக்டர்களில் ஒன்று சொன்னது.
“உன்னை பழுது பார்க்க எம்மிடம் பழுதுநீக்கி இல்லை,” சொன்னது நில-பொறுப்பாளி.
“அதனால் நான் இங்கேயே கிடந்து துருவேற வேண்டும்,” பென்னர் கதறியது, “எனக்கு மூன்றாம் தர மூளை இருந்தும் கூடவா’
“அதனால் உன்னைக் கொண்டு இனிமேல் எந்த பயனும் இல்லை”, இயக்குநர் ஒத்துக் கொண்டது; பென்னரை பின்னால் விட்டு விட்டு அவை நிலையாக சிறுகசிறுக முன்னேறின.

அவை முதல் வெளிச்சத்துக்கு ஒரு மணி நேரம் இருக்கும் போது ஒரு சிறு மேடான சமதளப்பகுதியை அடைந்த போது பரஸ்பர சம்மதத்துடன் நின்றன; ஒன்றை ஒன்று தொட்டுக் கொள்ளும் படி ஒன்று சேர்ந்து நின்றன.
“இது ஒரு வினோதமான நாடு”, நில-பொறுப்பாளி சொன்னது.

விடியும் வரை மௌனம் அவற்றை போர்த்தி இருந்தது. ஒவ்வொன்றாக அவை புற-ஊதாக் கதிர்களை அணைத்தன. இம்முறை நில-பொறுப்பாளி முன் செல்ல அவை நகர்ந்தன. ஓசையெழுப்பியபடி மெல்ல ஒரு வளைவை அடைந்த அவை உடனடியாக ஒரு சிற்றோடை நெளிந்து ஓடும் ஒரு சிறிய பள்ளத்தாக்கை அடைந்தன.

முதல் வெளிச்சத்தில் பள்ளத்தாக்கு ஆளரவமற்று கடுங்குளிராக தோன்றியது. தூரத்து சரிவின் குகைகளில் இருந்து ஒரே ஒரு மனிதன் வெளிவந்தான். அவன் படுமோசமான தோற்றம் கொண்டிருந்தான். தோள்களைச் சுற்றி இட்டிருந்த சாக்கைத் தவிர அவன் நிர்வாணமாகவே இருந்தான். சின்னதாக குறுகியிருந்தான், ஒரு எலும்புக் கூட்டினுடையது போன்று விலா எலும்புகள் உள்ளே புடைத்து தெரிந்தன, ஒரு காலில் அருவருக்கத்தக்க வகையில் சிவந்து தெரிந்தது ஒரு பகுதி. அவன் தொடர்ச்சியாக நடுங்கினான். அந்த பெரிய எந்திரங்கள் மெல்ல அவனை நெருங்கி போது, அவன் ஓடையிலிருந்து நீர் மொள்ள குனிந்து அவற்றுக்கு முதுகு காட்டி நின்று கொண்டிருந்தான்.
அவை அவனுக்கு மேலான உயரத்தில் அச்சமூட்டும் படி நிற்கும் போது அவன் சட்டென்று திரும்பி அவற்றை எதிர்கொண்டிட, அவனது முகம் பட்டினியால் கோரமாகி இருந்ததை அவை கவனித்தன.
“எனக்கு சாப்பாடு கொண்டு வா,” அவன் கரகரத்த குரலில் சொன்னான்.
“சரிங்க முதலாளி,” எந்திரங்கள் கூறின.”உடனடியாக

பிரையன் ஆல்டிஸ்: சிறுகுறிப்பு



பிரையன் ஆல்டிஸ் 84 வயதிலும், அறவுணர்வு மங்காமல், இங்கிலாந்து வதைமுகாமில் சிறுபான்மையினர் ஒடுக்கப்படுவது குறித்து நாவல் (Harm) எழுதிய மூத்த அறிவியல் புனைகதையாளர். ஆரம்பத்தில் ராணுவத்தில் பணியாற்றிய ஆல்டிஸ் ஒரு புத்தகக் கடையில் சேர்ந்தார். இந்த அனுபவப் பின்னணியில் அவர் எழுதியவை அவருக்கு முதல் நாவல் வெளியிடும் வாய்ப்பை தந்தது. 1955-இல் வெளியான Brightfount Diaries தோல்வியடைந்தது. ஆனால் இத்துடன் ஆல்டிஸின் அறிவியல் புனைகதை ஏழுத்து வாழ்வு ஆரம்பித்தது. முழுநேர எழுத்தாளரான அவர் 320-க்கு மேற்பட்ட சிறுகதைகளும் 20-க்கு மேற்பட்ட நாவல்களும் எழுதினார். கட்டுரை மற்றும் கவிதை நூல்களும் வெளியிட்டுள்ளார். Oxford Mail பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றினார். ஆல்டிஸ் ஒரு குறிப்பிடத்தக்க தொகுப்பாளரும் கூட.
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates