Thursday 3 June 2010

சந்தேஷம்: வீட்டைத் துண்டாக்கும் அரசியல்



இந்த மாத உயிர்மையில் எழுதியுள்ள பத்தியில் சாரு கேரள முதலமைச்சருக்கு தான் எழுதிய திறந்த கடிதத்தை பற்றி குறிப்பிட்டிருந்தார். கேரளாவில் ஒரு முதலமைச்சரையே கேள்வி கேட்கும் சுதந்திரம் இருப்பதாய் சொல்லி இருந்தார். தமிழகத்தில் உள்ளது ஒரு மாபெரும் பொம்மலாட்ட மேடை மட்டுமே. இன்று மதியம் சத்தியன் அந்திக்காடு இயக்கிய ”சந்தேஷம்” என்றொரு மலையாளப்படம் பார்த்தேன். ஏஷியானெட்டில் ஒளிபரப்பானது. ஸ்ரீனிவாசன் திரைக்கதை எழுதிய இப்படம் எனக்கு சாருவின் மேற்சொன்ன கருத்தை நினைவூட்டியது.

”சந்தேஷம்” ஒரு அரசியல் பகடி. அதுவும் கேரளாவின் மிக வலிமையான செங்கொடிக் கட்சியை கிண்டலடிக்கும் படம். கூடவே கேரள காங்கிரசாருக்கும் நிறைய முட்டை தக்காளி உண்டு. புத்திசாலித்தனமான திரைக்கதையும், திலகனின் அபாரமான நடிப்பும் படத்தின் பிரதான வலிமைகள். மிகை உணர்ச்சி, உபதேசங்கள், மேலோட்டமான ஒளிப்பதிவு, ஆட்டுக்குட்டி மேய்வது போன்ற காட்சித்தொகுப்பு என்பவை குறைகள். ”பஞ்சவடிப்பாலத்திற்கு” அடுத்தபடியாய் மெச்சப்பட வேண்டிய மலையாளத்தின் மிகச்சிறந்த அரசியல் பகடிகளில் இப்படமும் ஒன்று.

“சந்தேஷம்” என்றால் “வருகை” என்று பொருள். மிக அருமையான தலைப்பு. தன் ஆயுசின் பெரும்பகுதியை தமிழகத்தில் வேலையில் கழித்து விட்டு ஓய்வை நிம்மதியாக கழிக்க சொந்த ஊரான கேரளாவுக்கு திரும்பும் ராகவன் நாயர் நேரிடும் அதிர்ச்சிகளும், வேதனைகளும் தான் படம்.இப்படி நெடுங்காலம் கழித்து வருகை தரும் ராகவன் ஒரு வெளியாளாகவே முக்கால்வாசி படம் வரை இருக்கிறார். இப்படி வெளியாளின் பார்வை வழியாக கேரள அரசியலை பார்க்க வைப்பதே ஒரு மாற்றுப்பார்வையை பார்வையாளனுக்கு அளிக்கும் சிறந்த ஒரு திரைக்கதை உத்தி தான். ராகவன் நாயர் ஊரில் இல்லாத காலத்தில் கேரளா மாறி விட்டிருக்கிறது. கொள்கைகளை மறந்த கட்சிகளின் வெற்று கோசங்களும், அரசியல் தர்ணாக்களும், சுயநல பழிவாங்குதல்களும் கேரளா எங்கும் ஒரு புற்றுநோய் போல் பரவி விட்டிருக்கிறது. மாநிலத்தின் வளர்ச்சியை இந்த போலி அரசியல்வாதிகள் தடுப்பது மட்டுமல்லாமல், மக்களின் அன்றாட வாழ்விலிருந்து விலகி இயங்குகிறார்கள்.அதிகார போட்டி மட்டுமே இவர்களின் தலையாய இயக்கம். இதற்காக ஏழ்மை போன்ற அடிப்படை பிரச்சனைகளை திசை திருப்புகிறார்கள். கேள்வி கேட்பவர்களுக்கு எதிராக அறிவுஜீவித்தன சொற்றொடர்களும் மிரட்டல்களும் ஏவப்படுகின்றன.

ராகவனுக்கு இந்த இந்த கலாச்சார நோய் ஆரம்பத்தில் புரிவதில்லை. வெள்ளாந்தியாகவே இருக்கிறார். அவரது மகன்களில் இருவர் வெவ்வேறு கட்சித் தொண்டர்கள். பிரபாகரனாக நடித்துள்ள ஸ்ரீனிவாசன் கம்யூனிஸ்ட். பிரகாஷாக நடித்துள்ள ஜெயராம் காங்கிரஸ். இவர்கள் சதா மோதிக் கொள்கிறார்கள். இவர்களின் அசட்டுத்தனம் மற்றும் சுயநலத்தால் ராகவன் போலிசில் கைதாகிறார். தன் தோப்பை இழக்கிறார். மகளின் திருமணம் பாதிக்கப்படுகிறது. மனைவிக்கு மாரடைப்பு வருகிறது. இறுதியில் அவர் தன் வீட்டை சுத்திகரிக்க முடிவெடுக்கிறார். இரு மகன்களையும் வீட்டை விட்டு துரத்துகிறார். இறுதியில் அவர்கள் திருந்தி கட்சி தொடர்பை துண்டித்து வேலைக்கு சென்று நல்ல மக்களாகின்றனர். இங்கு ”வீடு” என்பது மாநிலத்துக்கான ஒரு குறியீடு என்று நோக்கும்பட்சத்தில் கேரள அரசியல் பற்றின ஒரு கூர்மையான விமர்சனமாக படம் மாறுவதை நாம் கவனிக்கலாம்.அதே நேரம் இப்படம் கம்யூனிச சித்தாந்தம் குறித்த விமர்சனம் அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

படத்தில் காங்கிரசை விட அதிகம் பகடி செய்யப்படுவது கம்யூனிச்டு கட்சிதான். படத்தின் மிகச் சிறந்த காட்சிகளும் இவை தான். உதாரணமாக, கம்யூனிஸ்டு கட்சியின் அறிவுஜீவி தலைமை மக்கள் பிரச்சனைகளில் இருந்து மிகவும் விலகி, பாசாங்குடன் உள்ளீடற்று செயல்படுவதை ஒரு காட்சி காட்டுகிறது. பிரபாகரனுக்கு மணமுடிக்க ஆசை. தலைவர் குமாரப் பிள்ளையிடம் அனுமதி வேண்டுகிறான். அவர் மறுக்கிறார். ஒரு தொண்டனுக்கு மனைவி மக்கள் தடையாக இருப்பார்கள்; கம்யூனிசஸ்டுக்கு ஏழை உழைப்பாளி வர்க்கம் தான் குடும்பம்; அவர்களை நேசிக்க பழகிக் கொள் என்கிறார். பிரபாகரன் அவரை விடுவதாக இல்லை. “நீங்கள் ஏன் மணமுடித்தீர்கள்?” என்று கேட்கிறான். அதற்கு தலைவர் “நான் அதை எண்ணி இன்று வருத்தப்படுகிறேன்” என்கிறார். அடுத்து பிரபாகரன் தலைவர் விடிகாலையில் கோவிலுக்கு மறைந்து சென்று சாமி கும்பிடுவது தனக்கு தெரியும் என்று சொல்லி அவரை மிரட்டப் பார்க்கிறான். தலைவர் சற்று வெருண்டு ”அது உனக்கெப்பிடி தெரியும்?” என்கிறார். பிரபாகரன் “நானும் தினமும் தலையில் துண்டு மூடிக் கொண்டு அதே கோவிலுக்கு அல்லவா செல்கிறேன்” என்கிறார். தலைவர் கடைசியில் சம்மதிக்கிறான். ஆனால் ஒரு நிபந்தனை. மணப்பெண் கட்சி அனுதாபியாக இருக்க வேண்டும். கம்யூனிஸ்டு கட்சிக்கூட்டங்கள் படத்தின் மிகச்சிறந்த நகைச்சுவை பகுதிகள். ஒரு கூட்ட முடிவில் வழக்கமாக அருந்தும் சாயாவுடன் பருப்பு வடைக்கு பதில் கடைக்காரர் பழங்கள் கொண்டு வருகிறார். தலைவர் குமாரப்பிள்ளை கடுமையாக ஆட்சேபித்து எப்படி நீ கட்சியின் மரபான உணவு பழக்கத்தை மாற்றலாம், போய் வடை போட்டு கொண்டு வா என்று அவற்றை திருப்பி அனுப்புவார். மற்றொரு இடத்தில் “கட்சி பொது மக்களோடு அணுக்கமாக இல்லை” என்று ஒரு உறுப்பினர் குற்றம் சாட்ட தலைவர் அவரிடம் “உன் மீது ஒழுக்க நடவடிக்கை” எடுப்பேன் என்று மிரட்டுகிறார். அவர் மேலும் சொல்கிறார்: “கட்சிக்குள் நாங்கள் ஜனநாயகத்தை கடைபிடிக்கிறோம். அதனால் தான் தலைவர்களும் தொண்டர்களும் சேர்ந்து டீ, வடை தின்கிறோம், பீடி பிடிக்கிறோம். அதற்காக இப்படி கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது”.

ஒரு அரசியல் பகடி என்பதை மீறி மிகையான லட்சியவாதத்தின் வீழ்ச்சியை பேசும் படமாகவும் இதனை பார்க்க வாய்ப்புள்ளது. கட்சி, குழந்தைகள், மண் என ஒவ்வொன்றின் மீதான மிகை ஈடுபாடும் வாழ்வை கேலிக் கூத்தாக்குவதை படம்சுட்டுகிறது. மீண்டும் ஏசியாநெட்டில் ஒளிபரப்பட்டால் நிச்சயம் பாருங்கள்.
Share This

2 comments :

  1. படத்தில் பிரேதத்தை வைத்து அரசியல் செய்ய இது எங்கள் பிணம் என்று இரண்டு கட்சிக்காரர்களும் சண்டை போடும் காட்சி ஒரு ரியல் டார்க் ஹ்யூமர்.
    இதைப் போலவே அரபி கதா திரைப்படமும் சீனிவாசனின் மற்றொரு பகடி.
    சித்திக்,திலகன் என்று உப கதாப்பாத்திரங்கள் எங்கு ஜொலிக்கிறதோ அந்தத் திரைப்படம் நினைவில் நிற்கும்!

    ReplyDelete
  2. ஆம் விக்கி
    இந்த ரத்தசாட்சி பகடி மலையாள சினிமாவின் ஒரு eternal humor

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates