Monday 21 June 2010

தாகம் – குறும்பட விமர்சனம்

தமிழ் ஸ்டுடியோ இணைய இதழில் நான் எழுதி வரும் குறும்பட விமர்சன தொடரில் இவ்வாரம் ’தாகம்”

எழுத்து, இயக்கம்: மா.யோகநாதன்


இசை: பா.சதீஷ்

படத்தொகுப்பு: பா.பிரமோத்

ஒளிப்பதிவு: சீ.அரவிந்த்குமார்




”தாகம்” ஒரு தேர்தல் பிரச்சார மைக்கை விட சத்தமான படம். மரம் வெட்டுதல் போன்ற இயற்கை அழிப்பு நடவடிக்கைகள் எதிர்காலத்தில் இயற்கை வளங்களை, குறிப்பாக நீர்வளத்தை, கடுமையாக பாதிக்கும் என்று எச்சரிப்பதே இப்படத்தின் இயக்குநர் மா.யோகநாதனின் உத்தேசம். இந்த பரப்புரையில் இயக்குநர் இரு தவறுகள் செய்கிறார்.
சூழலியல் பிரச்சனை பன்முகத்தன்மை கொண்டது மற்றும் சிக்கலானது. உதாரணமாக, இந்த வருட கோடையில் வெப்பம் அதிகம் ஆனதற்கான காரணங்களில் அப்காகினிஸ்தான் போர் வரை அடக்கம். இயக்குநர் உலக வெப்பமயமாதலை ஒரு விவசாயி நுண்பேசி, கார், வீடு வாங்கி, சட்டை பேண்ட் அணிந்து தலை சிலுப்புவதற்காக பேராசைப்பட்டு சில மரங்களை வெட்டி விற்கும் பாவச்செயலின் விளைவாக சுருக்கி விடுகிறார். இப்படியான பாமர நம்பிக்கையை பரப்புவதற்காக கணிசமான பணம் மற்றும் மனித ஆற்றல் விரயமாக்கியுள்ள மா.யோகநாதன் அதற்கு பதில் சில மரக்கன்றுகளை நட்டு திருப்தி உற்றிருக்கலாம். அடுத்து சினிமாவில் அரைப்பக்க வசனம் கடத்தும் சேதியை ஒரு அரைநொடி நேர காட்சியால் மேலும் அழுத்தமாய் சொல்ல முடியும். சினிமாவின் குறிப்பிடத்தக்க சிறப்பே காட்சிகளின் மூலம் மொழியைக் கடந்து பார்வையாள மனதுடன் உரையாட முடிவது தான். ஆனால் மா.யோகநாதன் சினிமா மொழியை புறக்கணித்து வசனங்களின் சிலுவையில் ஏறிக் கொள்கிறார். உதாரணமாக முதல் காட்சியில் புயலடித்து மரம் சாய்ந்துள்ளதை நாயகனான அவினாசி கவனிக்கிறார். புயலின் பாதிப்பை காட்ட இலை தழைகளும், குப்பை பொருட்களும் சிதறிக் கிடக்கும் ஒரு காட்சி போதும். ஆனால் அவினாசியை “நேத்து புயலடிச்சிருக்கு போலே” என்று குளோசப்பில் சொல்ல வைக்கிறார் இயக்குனர். நல்லவேளை அவினாசிக்கு கோபமோ சிரிப்போ வருவது போல் காட்சியில்லை. இருந்தால் “ஆஹா எனக்கு கோபம்/சிர்ப்பு வருது போல” என்று சொல்ல செய்திருப்பார். அவினாசி புயலில் விழுந்த மரத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு தோட்டத்து மரமாக வெட்டி விற்கிறார். இப்படி அவர் பணத்தாசையால் பீடிக்கப்பட்டு இயற்கையை அழிப்பதை சொல்லவும் இயக்குநர் நிறைய காட்சிகளை வீணடிக்கிறார். இறுதியில் செல்லமுத்து என்ற கோமணதாரி ஒரு சொம்பு தண்ணீரில் குளிப்பதை காட்டி ஊரில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதை விளக்குகிறார். பின்னரும் திருப்தி அடையாமல் அவினாசி சூடாகி விட்ட தன் காருக்குள் ஊற்ற தண்ணீர் தேடி பொட்டல் வெளி எல்லாம் அலைந்து தளர்ந்து வீழ்ந்த பறவையை போல் மண்ணில் கிடப்பதை டாப் ஆங்கிளில் காட்டி முடிக்கிறார். அவிநாசி, அவரது தாய் முதல் சொம்பு நீரில் குளிக்கும் செல்லமுத்து வரை அனைவரும் படுமோசமாக நடித்திருந்தாலும் நம்மால் மன்னிக்க முடியாதது படத்தொகுப்பாளர் பா.பிரமோத்தை தான். ஓட்டைக் குடத்தால் மொண்டு மொண்டு ஊற்றினால் தாகம் எப்படி தணியும்
Share This

2 comments :

  1. ஏன் அபிலாஷ் இவ்வள்வு கோவம்..?

    ReplyDelete
  2. உங்களுக்கு பிடித்த குறும்படத்தை பற்றி சொல்லுங்களேன்...

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates